கை கொடுக்க வரும் 'சூரியன்': சொக்கத் தங்கம் போல ஜொலிக்கப்போகும் தமிழக கிராமங்கள்!
நெல்லை: தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் நிலவி வரும் மின்வெட்டை சமாளிப்பதற்கு முதற்கட்டமாக 20,000 சோலார் மின்விளக்குகள் அமைக்க தமிழக அரசு ரூ.52 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
வரலாறு காணாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. கிராமப்புறங்களில் 18 மணிநேரமும், நகர்ப் பகுதிகளில் 12 மணிநேரமும் மின் வெட்டு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கிராமப் புறங்களில் தெரு விளக்குகளுக்கு மின்சாரம் இல்லாமல் தெருக்கள் இருள் அடைந்து காணப்படுகின்றன.
மக்கள் பகல் பொழுதை எப்படியாவது ஓட்டிவிட்டாலும், இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.
சோலார் தெருவிளக்கு:
தெரு விளக்குகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, மின்சாரத்தை சேமிக்க சோலார் திட்டம் மூலம் தெரு விளக்குகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட மதிப்பீடு மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 18.28 லட்சம் மின் விளக்குகள்
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வருகிறது. அதை கருத்திற்கொண்டு மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் சோலார் மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளில் 18 லட்சத்து 28,461 மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2012-2013ல் 20,000 சோலார் மின்விளக்குகள்:
2012-13ம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 20,000 மின்விளக்கு அமைக்கப்படுகிறது. மேலும் 500 வாட் திறன் கொண்ட சோலாரை ஒரு இடத்தில் பொருத்தி 10 தெரு விளக்குகள் எரியும் வகையில் அமைக்கப்படுகிறது. இதுபோல் மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக ஆயிரம் விளக்குகள் அமைக்கப்படுகிறது.
ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்குகளில் வார்டு வாரியாகவும், தெரு வாரியாகவும் டென்ஜெட் கோ மூலம் மாற்றி புதிய 18 ஆயிரம் சோலார் விளக்குகளை அமைக்க 52 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக
காஞ்சிபுரம்- 1125, திருவள்ளுர்- 1160, கடலூர்- 825, விழுப்புரம்- 1090, வேலூர்- 1000, திருவண்ணாமலை- 790, சேலம்- 700, நாமக்கல்- 560, தர்மபுரி- 400, கிருஷ்ணகிரி- 550, ஈரோடு- 550, திருப்பூர்- 635, கோயம்புத்தூர்- 420, நீலகிரி- 120, தஞ்சாவூர்- 1290, நாகப்பட்டினம்- 830, திருவாரூர்- 730, திருச்சி- 865, கரூர் - 380, பெரம்பலூர்- 190, அரியலூர்- 320, புதுக்கோட்டை- 620, மதுரை- 840, தேனி- 200, திண்டுக்கல்- 475, ராமநாதபுரம்- 495, விருதுநகர்- 540, சிவகாசி- 535, திருநெல்வேலி- 795, தூத்துக்குடி- 750, கன்னியாகுமரி- 420.
கிராமங்களில் ஒளி வீசும்...
அரசின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, இட்டேரி கிராமங்களிலும், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்களிலும் சோலார் மின்னொளி திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இனி கிராமங்களில் அனைத்து தெருவிளக்குகளும் ஒளிவீசும் என்பதில் ஐயமில்லை.