மும்பை பயங்கரவாத தாக்குதல்... ஹெட்லிக்கு 35 வருட சிறைத் தண்டனை
சிகாகோவில் உள்ள நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று அளித்தது. 2008ம் ஆண்டு மும்பையி்ல் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவி பெரும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்களை ஏவி விட்டவர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர் ஹெட்லி. மேலும் தாக்குதலுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து பல இடங்களை வேவு பார்த்து்ம் சென்றார்.
அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்பட்ட இவரை அமெரிக்க அதிகாரிகள் கோர்ட்டில் நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தண்டனை அளிக்கப்பட்டது.
தீர்ப்பை அறிவித்த மாவட்ட நீதிபதி ஹாரி லீன்வெப்பர் கூறுகையில், நான் மாறி விட்டேன் என்று ஹெட்லி கூறியுள்ளார். ஆனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அமெரிக்க வாழ்க்கை முறைக்கு அவர் மாறி விட்டதாக நான் நம்பவில்லை. எனவே அவர் செய்த தவறுக்கு தண்டனை அவசியமாகிறது என்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 அமெரிக்கர்களும் அடக்கம். தீர்ப்பைக் கேட்க வந்திருந்த பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினரான லிண்டா ராக்ஸ்டேல் என்பவர் கூறுகையில், தாக்குதலில் நானும் காயமடைந்தேன். இன்னும் கூட எனது மனக்காயம் ஆறவில்லை. வாழவே தகுதி இல்லாதவர் ஹெட்லி என்றார் கண்களில் நீர் மல்க.
52 வயதாகும் ஹெட்லிக்கு குறைந்தது 50 வருட தண்டனையாவது கிடைக்கும் என அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர். அதேசமயம் அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. முன்னதாக அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அவர் விசாரணைக்கு ஒத்துழைத்ததாலும், குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும் அதிலிருந்து அவர் தப்பி விட்டார்.
ஹெல்டி தனது சிறைக்காலத்தை அமெரிக்காவிலேயேதான் கழிப்பார் என்றும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.