ஆயுதப் பாதையில் பயணிக்கும் 'தெலுங்கானா' - உதயமானது 'தெலுங்கானா செம்புலிகள் இயக்கம்'
ஹைதரபாத்: ஆந்திராவில் வரலாறு திரும்புகிறது... 1940களின் இறுதியில் இந்தியாவையே அதிர வைத்தது தெலுங்கானா விவசாயிகளின் ஆயுத முனையிலான வர்க்கப் போராட்டம்.. இப்போது அதே தெலுங்கானா பிரதேசம் "தனி மாநில" கோரிக்கைக்காக ஆயுதமேந்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கிறது.
தெலுங்கானா யுவசேனா மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், தெலுங்கானாவை எதிர்ப்போர் அழித்தொழிக்கப்படுவர்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "ஆந்திர அரசே விலகிக் கொள்.. தெலுங்கானாவே எங்களது இலக்கு" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தின் செயலாளர் சத்ரபதியின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் தெலுங்கானாவை வென்றெடுக்க முடியாது. தெலுங்கானா தனி மாநிலத்தை ஏ-கே.47 ரக துப்பாக்கிகள் மூலமே வென்றெடுக்க முடியும்.
தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் முதுகில் குத்தும் துரோக மனோபாவம் கொண்டவர்களை செம்புலிகள் இயக்கம் தண்டிக்கும். மக்களே! ஆயுதமேந்திய போராளிகளுடன் இணையுங்கள்! நாமே தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம்! என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த இயக்கம் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்காது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.