வெனிசுலா சிறையில் போலீசார்-கைதிகள் துப்பாக்கி சண்டை: 50 பேர் பலி
கரகாஸ்: வெனிசுலாவில் சிறையில் சோதனை மேற்கொண்ட போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டதில் இரு தரப்பிலும் 50 பேர் பலியாகியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மேற்குப் பகுதியில் யூரிபானா என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரு வேறு பிரிவினர் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து போலீசாரை சிறை கைதிகள் தாக்கினர். பதிலுக்கு போலீசாரும் தாக்கியதால் கலவரம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில் 50 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் கைதிகள், போலீசார் மற்றும் சமூக சேவகர்கள் அடங்குவர்.
இந்த தகவலை வெனிசுலா சிறைத்துறை அமைச்சர் வெரிலா தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.