கர்நாடகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை, மகா அமைதி நிலவுகிறது.. ராஜ்நாத் சிங்
கர்நாடகத்தில் எதியூரப்பா தனியாகப் போய் தனிக் கட்சி ஆரம்பித்து விட்டார். முன்பு உள்ளுக்குள் இருந்து கொண்டே குடைந்து வந்த அவர் தற்போது வெளியிலிருந்து பாஜகவை வெறுப்பேற்றி வருகிறார். அவரது ஆதரவாளர்கள் படிப்படியாக ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் அரசு கவிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் உள்ளே எதுவும் நடக்கவில்லை, எல்லாம் அமைதியாக இருக்கிறது என்பது போல பேச ஆரம்பித்துள்ளனர் கர்நாடக பாஜக தலைவர்களும், அகில இந்திய தலைமையும்.
இருப்பினும் எதியூரப்பா ஆதரவாளர்களான 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஷெட்டர் அரசுக்கு நல்ல விஷயமல்ல என்பதால் கர்நாடக பாஜக சற்றே பீதியுடன் உள்ளது. இந்த நிலையில் ஷெட்டர் டெல்லிக்குக் கிளம்பி வந்துள்ளார்.
டெல்லி வந்த அவர் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து பேசினார். பின்னர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் எந்த நெருக்கடியும் இல்லை. எங்களது அரசு முழுப் பதவிக்காலத்தையும் நிறைவேற்றும் என்றார்.
ஷெட்டர் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். கட்சித் தலைவராக பொறுப்பேற்றதற்காக ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன். அவருடைய ஆசியையும் பெற்றேன் என்றார்.
மடாதிபதிகளின் ஆசியை நாடும் ஷெட்டர்
இதற்கிடையே மறுபக்கம் மடாதிபதிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் குதித்துள்ளார் ஷெட்டர். இதுவரை 65க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், சாமியார்களின் ஆதரவை அவர் கலெக்ட் செய்து விட்டாராம். பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த மடாதிபதிகளாம் இவர்கள்.
எதியூரப்பாவும் இப்படித்தான் தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் மடாதிபதிகள், சாமியார்களின் ஆதரவை உறுதி செய்து கொள்வார். அதே பாணியில் தற்போது எதியூரப்பாவால் ஏற்பட்ட சிக்கலிலிருந்து தப்பிக்க சாமியார்களை நாட ஆரம்பித்துள்ளார் ஷெட்டர்.
கிட்டத்தட்ட 65 மடாதிபதிகளை தனது வீட்டுக்கு அழைத்து நேற்று அவர் பேசினார். அவர்களின் ஆதரவையும், ஆசியையும் அவர் பெற்றார். இந்த மடாதிபதிகளில் பெரும்பாலானவர்கள் தலித், எஸ்.டி, மற்றும் பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.