போப் பறக்க விட்ட புறாவை பட்டென்று பிடித்துக் கடித்துக் குதறிய சீ கல்... வாடிகனில் 'ஷாக்'!
சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா. ஆனால் இந்த சமாதானப் புறாவை கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று.
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார். அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து போப்பாண்டவர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடும் வேதனையில் துடித்தபடி புறா சீகல்லிடமிருந்து தப்பித்து ஓடிப் பறந்ததைப்பார்த்து கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். புறாவை சரமாரியாக கடித்துக் குதறிய பின்னர் அந்த சீகல் பறவை அங்கிருந்து பறந்தோடி விட்டது.
இத்தனைக்கும் ரோம் நகரிலிருந்து வந்த 2000 இளைஞர்கள் நடத்திய அமைதிப் பேரணி போப்பாண்டவர் உரை நிகழ்த்திய செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் நேற்று முடிவடைந்தது. இதன் அறிகுறியாகவே புறாவைப் பறக்க விட்டார் போப்பாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.