நெல்லை மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய தடை விதிக்க கட்சியினர், அமைப்புகள் கோரிக்கை
நெல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் நெல்லைக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தியிடம் மனுக்கள் அளித்துள்ளன.
அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது,
பாமக நிறுவனர் ராமதாஸ் தலித் அல்லாதோர் சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டு வரும் இயக்கங்களையும், அதன் தலைவர்களையும் தவறான விமர்சனங்கள் செய்து அவதூறு செய்திகளை பரப்பி வன்முறைகளை தூண்டி வருகிறார். நெல்லையில் வரும் 30ம் தேதி இது குறித்த கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நெல்லை மாவட்டத்திற்குள் ராமதாஸ் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் படுத்து போராட்டம்:
மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன், செய்தி தொடர்பாளர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது,
சாதிக் கலவரத்தை தூண்டும் பாமக நிறுவனர் நாளை (30ம் தேதி) நெல்லை வரும்போது அவர் வரும் ரயில் முன் தண்டவாளத்தில் படுத்து ரயிலை தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்புவோம் என்றனர்.
மாவிலை ஆடையுடன் மனு:
இக்கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் நாங்குநேரி ஒன்றிய செயலாளர் இசக்கிமுத்து என்ற இரணியன் மாவிலையை ஆடையாக உடுத்தி சுரைக் குடுக்கைகள் அணிந்து பழங்குடியினர் போல் ஓலையை கையில் பிடித்தவாறு கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவை தாளில் மட்டுமின்றி ஓலையிலும் எழுதி அளித்தார்.
பல்வேறு கட்சிகளும், தலித் அமைப்புகளும் ஒரே நேரத்தில் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முயன்றதால் வளர்ச்சி மன்ற கூட்டரங்கு முன்பு போலீசாருடன் வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.