கடலை ராமலிங்கத்தின் சொத்துக்களை ரிலீஸ் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள்
தாராபுரம் உப்புத்துறை பாளையம் நிலக்கடலை வியாபாரி ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.27,500 கோடி மதிப்புள்ள அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து, கடலை வியாபாரி ராமலிங்கத்தின் வங்கி கணக்கு, லாரிக்கரில் இருந்த நகைகளை முடக்கி வைத்திருந்தனர்.
தாராபுரத்தில் உள்ள 2 வங்கிகளில் இருந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. நிரந்தர வைப்பு நிதியாக சுமார் 2 கோடி ரூபாய் வைத்திருந்ததையும் வங்கி லாக்கரில் இருந்த 703.66 கிராம் தங்க நகை, மற்றும் 5 கிலோ 700 கிராம் வெள்ளி பொருட்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.
ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், "எனது வங்கி கணக்கை முடக்கியதால் குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லை என்று வருமான வரிதுறை அதிகாரிகளுக்கு கடந்த 11-ம் தேதி கடிதம் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
எனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை முறைகேடானது. அது ஒரு சதி வேலை தமக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வழக்குப் போடப் போவதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாராபுரம் வந்து, ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு வங்கிகளுக்கு சென்றனர். வங்கி கணக்குகளை மீண்டும் செயல்படுத்த வங்கி அதிகாரிகளுக்கு ரிலீஸ் ஆர்டர் வழங்கியதோடு, லாக்கரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை ஒப்படைத்தனர்.
அதையடுத்து அவரை பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றி சென்று வீட்டில் இறக்கி விட்டனர். அத்துடன், ராமலிங்கத்தின் வீட்டில் சீல் வைக்கப்பட்ட பீரோக்களையும் திறந்து விட்டுச் சென்றனர்.
கடலை வியாபாரி வீட்டின் முன்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட, (போலியான ஆவணம் என அறிவிக்கப்பட்ட) ரூ.27,500 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. பீரோ திறக்க வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் ஏதும் கூறாமல் விருட்டென்று கிளம்பி சென்றனர்!
வருமான வரித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்த்து தன் கண்களையே நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்துக்கொண்டாராம் ராமலிங்கம்.