பூனை முடிதான் டிபன்... லஞ்ச்… அமெரிக்க பெண் அடிமையான கதை!
குழந்தைகள் மண் சாப்பிடுவார்கள். அதிகம் போனால் சாக்பீஸ் சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகள் சாம்பல் விபூதி சாப்பிடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து பெரிய ஆளாக ஆன பின்னும் பூனை முடியை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஒரு பெண்.
15 ஆண்டுகளாக பந்து பந்தாக சுருட்டி பூனை முடியை ருசித்து சாப்பிட்டு வருகிறார் 43 வயதான அந்தப் பெண். பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார் அந்தப் பெண்.
இதற்காக தான் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள பூனைகளைப் பிடித்து அதன் முடிகளை சேகரித்து வருகிறார். கேட்பதற்கு அருவெருப்பாக இருந்தாலும் அந்தப் பெண் பூனை முடியின் ருசிக்கு அடிமையாகிவிட்டார் என்றே கூறுகின்றனர்.
பூனை முடியின் ருசி
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் வளர்த்து வந்த பூனையை கொஞ்சி கொண்டிருந்தவர், கையில் ஒட்டிய அதன் முடியை தின்றார். அதன் ருசி பிடித்துப் போகவே கொஞ்சம் கொஞ்சமாக செல்லப் பூனையின் முடியை பிய்த்து உருண்டையாக்கி சாக்லேட் போல தின்ன தொடங்கினார்.
ஆயிரக்கணக்கான பூனைகள்
கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை ஆயிரக்கணக்கான பூனைகளின் முடிகளை உருண்டைகளாக்கி மென்று சுவைத்துள்ளார். இதுவரை அவருக்கு எந்த பிரச்னையும் வரவில்லை என்பதுதான் ஆச்சரியம். இப்போது அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டார்.
மனிதர்கள் எதற்கெல்லாம் அடிமையாகிறார்கள் என்பது தொடர்பான டிஎல்சி டிவி நிகழ்ச்சியில் இதை லிசா வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
பஞ்சு மிட்டாய் டேஸ்ட்
தினமும் காலை டிபனே அவருக்கு பூனை முடிதானாம். இதற்காக தான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முழுவதும் பூனை முடியை தேடி சேகரிப்பாராம். ஏறக்குறைய பஞ்சு மிட்டாய் போல இதன் டேஸ்ட் இருக்குமாம். சிறிது நேரம் வாயில் வைத்து சுவைத்துவிட்டு பிறகு எடுத்து விடுவாராம் லிசா. லிசாவை போல பலரும் பலவிதமான விஷயங்களுக்கு அடிமைகளாகி உள்ளனர்.. உருண்டை பல்பு, டியூப்லைட், கண்ணாடி துகள், பேப்பர்,செங்கல், ஏன் பல்லியைக் கூட சிலர் சுவைத்து சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.