மக்கள் இடம் பெயர்வினால் இந்தியாவில் அதிகரிக்கும் எய்ட்ஸ் பாதிப்பு!
டெல்லி: பெரிய அளவில் நடைபெறும் இடப் பெயர்வினால் எச்ஐவி பாதிப்பு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இன்றைக்கு கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு ஊர்களுக்கும் பெருமளவில் மக்கள் இடம் பெயர்கின்றனர்.
இவ்வாறு கூட்டம் கூடடமாக இடம் பெயர்ந்து போவதன் காரணமாக எச்ஐவி பரவலும், எய்ட்ஸ் பரவலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம்.இது அபாயகரமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.
3ல் 1பங்கு இடம்பெயர்ந்தோர்
2001 இந்தியமக்கள் தொகைக் கணக்குப்படி இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குப் பேர் இடம் பெயர்ந்தோர் ஆவர். அதாவது 27.4 சதவிகிதம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
10 மடங்கு எய்ட்ஸ் அதிகம்
பொது மக்கள் தொகையை விட இந்த இடம் பெயர்ந்தோர் மத்தியில் எச்ஐவி பரவல் கூடுதலாக இருப்பதாக, அதாவது 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை
மகாராஷ்டிரவில் 2009 கணக்குப்படி 18..6 சதவீதம் பேருக்கு பாலியல் வியாதிகள் இருந்ததாம். இவர்களில் 45 சதவீதம் பேர் முறையான சிகிச்சை பெறவில்லை. 76 சதவீதம் பேர் எய்ட்ஸ், எச்ஐவியின் சீரியஸ் தன்மை குறித்து தெரிந்திருக்கவில்லை. 13 சதவீதம் பேர்தான முறையான சிகிச்சை பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்ஐவி பரவும் அபாயம்
வேலைக்காக இடம் பெயர்ந்து பல்வேறு ஊர்களுக்குப் போகும் தொழிலாளர்களிடையே பாதுகாப்பான செக்ஸ் குறித்த விழிப்புணர்வு சற்றும் இல்லை. அவர்களின் செக்ஸ் பழக்க வழக்கங்களும் மிகவும் விபரீதமாக உள்ளது. சமூக, பொருளாதார பாதிப்பு குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. மேலும் மற்றவர்களை விட இவர்களுக்குத்தான் எச்ஐவி பரவல் வேகமாக நடைபெறும் அபாயம் உள்ளதாம்.
பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு
இந்த தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர்தான் ஆணுறையை அணிந்து உறவில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் பாதுகாப்பில்லாத உறவு முறைகளையே நாடுகின்றனராம்.
60 ஆயிரம் பேர் மரணம்
கடந்த வருடம் மட்டும் எய்ட்ஸ் நோயால் நாட்டில் சுமார் 60 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஆனால் 2007-ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கடந்த வருடம் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
39 சதவிகிதம் குடும்பப் பெண்கள்
கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 21 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 சதவிகிதம் 15 வயதுக் குட்டபட்டவர்களும், 86 சதவிகிதம் 15 முதல் 49 வயதுக் குட்பட்டோரும் அடங்கும். இதில் 39 சதவிகிதம் அதாவது 8 லட்சத்து 16 ஆயிரம் குடும்பப் பெண்கள் எய்ட்ஸ் நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது வருந்தத்தக்க விஷயம்.
செக்ஸ் தொழிலாளிகள் விழிப்புணர்வு
நாடு முழுவதிலும் உள்ள செக்ஸ் தொழிலாளர்களிடையே குறிப்பாக பெண்களிடையே எய்ட்ஸ் நோய் கணிசமாகக் குறைந் துள்ளதாக ஒரு ஆய்வு தெரி விக்கிறது. இந்த ஆய்வின்படி கடந்த 2007-ல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் செக்ஸ் தொழிலாளர்களின் சதவிகிதம் 5.06 ஆக இருந்தது. ஆனால் கடந்த வருடம் இது 2.67 ஆகக் குறைந்துள்ளது. விழிப்புணர்வு காரணமாகவே இது தடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.