இரு தரப்பும் உட்கார்ந்து பேச முன்வந்தால் அரசு உதவத் தயார்- ஜெயலலிதா
இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டியின்போது ஜெயலலிதா கூறுகையில், ஒரு முதலமைச்சராக நான இப்போது சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். கமல்ஹாசனை நேற்று சந்தித்த இஸ்லாமிய பிரதிநிதிகளிடம், படத்தில் சில காட்சிகளை தான் வெட்ட தயாராக இருப்பதாக தங்களிடம் கமல் கூறியதாகவும், அது தங்களுக்கு ஏற்புடையதே என்றும் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே கமல்ஹாசனும், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் உட்கார்ந்து பேசி, சுமூகத்தீர்வு காண முன்வந்தால் அதை அரசு வரவேற்று, சுமூகத் தீர்வு ஏற்பட உதவத் தயாராக உள்ளது.
விஸ்வரூபம் படப் பிரச்சினையைப் பொறுத்தவரை அரசியல் பிரச்சினை அல்ல. இது முற்றிலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைதான் இது. இதை மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இங்கு யாருடைய கருத்துச் சுதந்திரமும் முடக்கப்படவில்லை.
மணீஷ் தீவாரிக்கு பதிலளிக்க விரும்பவில்லை
இப்படத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க அதிகாரம் இல்லை என்று மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி பேசியிருப்பதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை. அவருக்கு தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1955 குறித்துத் தெரியவில்லை. டேம் 999 படம் எப்படித் தடை செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. அதுகுறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்தும் தெரியவில்லை. எனவே அவருக்குப் பதிலளிக்க முடியாது என்றார் ஜெயலலிதா.