போதைப் பொருள் கடத்திய யு.கே. பெண் - அப்பீல் நிராகரிப்பு... மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்
பாலி: போதைப் பொருள் கடத்தலில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 56 வயதான பெண்ணின் அப்பீல் மனுவை இந்தோனேசியாவின் பாலி உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
லின்ட்சே ஸாண்டிபோர்ட் என்ற அந்தப் பெண் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் பாலி தீவுக்குப் போயிருந்தபோது போதைக் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லின்ட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த அப்பீல் மனுவும் தள்ளுபடியாகி விட்டது. இதனால் மரணத்தைஎதிர்நோக்கி அப்பெண் காத்துள்ளார்.
முன்னதாக அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை மட்டுமே கொடுக்குமாறு அவரது தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை பாலி உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை.
லின்ட்சேவுக்கு உதவ இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகமும் மறுத்து விட்டதால் தற்போது வக்கீலும் கிடைக்காமல், செலவையும் சமாளிக்க முடியாமல் லின்ட்சேவின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
தற்போது பாலியில் உள்ள கெரோபோகன் சிறையில் லின்ட்சே அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் ஒரு அப்பீல் மட்டுமே செய்ய முடியும். அதையும் தாக்கல் செய்ய பிப்ரவரி 12ம் தேதிதான் கடைசி நாளாகும். எனவே லின்ட்சே குடும்பத்தினர் பெரும் தவிப்புடன் உள்ளனர்.
அவருக்காக நல்ல வக்கீல் யாரும் கிடைக்கவில்லையாம். இதுவும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.