கல்வி மந்திரி டூ சிறை வாழ்க்கை... கல்யாணசுந்தரம் ரவுண்ட் அப்
மாணவர்கள் பிட் அடித்து, ஆள்மாறட்டம் செய்து பரிட்சை எழுதுவார்கள். ஆனால் கல்வி அமைச்சர் ஒருவரே ஆள்மாறாட்டம் செய்ததுதான் யாருமே எதிர்பாராத சம்பவம்.
ஊழல், மோசடி, வழக்குகளில் பல அமைச்சர்கள் உள்ளே போய் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பத்தாம் வகுப்பு பரிட்சையில் ஆள்மாறட்டம் செய்து உள்ளே போன அமைச்சர் கல்யாண சுந்தரத்தைப் பார்த்து பல அரசியர்வாதிகள் நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர். ( இவர் சிக்கியதால் சிறைக்கு போயுள்ளார். சிக்காமல் ஆள்மாறட்டம் செய்த அரசியல்வாதிகள் எத்தனை பேரோ தெரியவில்லை).
கம்யூனிஸ்ட் குடும்பம்
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் குடும்பம் அரசியல் குடும்பம். தந்தை பெரியண்ணன் தங்கவேல் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர். 8ம் வகுப்புடன் படிப்பு மக்கர் செய்யவே முழுக்கு போட்டுவிட்டு அப்பா உடன் உதவியாக இருந்துவிட்டார் கல்யாணசுந்தரம்.
எட்டிப்பார்த்த அரசியல் ஆசை
இளைஞர் மன்ற செயல்பாடு-ஜிம் நடத்தி இளைஞர் வட்டாரத்தில் பிரபலமானார். அப்போது அரசியல் ஆசை வரவே பாஜகவில் இணைந்தார். லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கி தோல்வியடைந்தார்.
மக்களைக் கவர்ந்த இயக்கம்
சில காலம் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த கல்யாணசுந்தரம் மக்கள் இயக்கம் என்று ஒரு இயக்கத்தை தொடங்கி சேவை செய்து மக்களை கவர்ந்தார்.
என்.ஆர். காங்கிரசில் ஐக்கியம்
புதுவை முதல்வர் ரங்கசாமி காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர். காங்கிரசை தொடங்கினார். அப்போது கல்யாணசுந்தரமும் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார். தனது சுறுசுறுப்பான அரசியல் அதிரடி நடவடிக்கைகளால் ரங்கசாமியின் மனம் கவர்ந்த தொண்டரானார் கல்யாணசுந்தரம்.
மந்திரிசபையில் இடம்
2011 சட்டசபை தேர்தலில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பரூக் மரைக் காயரின் மகன் ஷாஜகானை தோற்கடித்தார். அமைச்சரவையில் 2-வது இடத்தையும் பிடித்தார். போக்குவரத்து மற்றும் கல்வித்துறை மந்திரியானார்.
விளையாடிய விதி
கல்வி அமைச்சராக இருந்து கொண்டு படிக்காமல் இருப்பது கல்யாணசுந்தரத்திற்கு நெருடலை ஏற்படுத்தவே தனித்தேர்வராக 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்தார். ஆனால் படிக்கவேண்டுமே? அங்குதான் கல்யாணசுந்தரத்தின் வாழ்வில் விதி விளையாடியது. அறிவியல் பரிட்சையில் அவர் செய்த தில்லுமுல்லு அமைச்சர் பதவியையே காலி செய்துவிட்டது.
சிறை சென்ற கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம் மீது கூட்டு சதி, போலி ஆவணம் தயாரித்தல், பயன்படுத்துதல், குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய 4 பிரிவு வழக்குகள் நிரூபிக்கப்பட்டது. கல்யாணசுந்தரத்திற்கும் அவருக்கு உதவிய ஆசிரியர் ஆதவன், அரசு அலுவலர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் திண்டிவனம் நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.
ப்ளீஸ் விட்டுடுங்களேன்!
நீதிபதி இருக்கையில் இருந்த மாஜிஸ்திரேட்டு சரிதா, நீங்கள் குற்றவாளி என்று இந்த கோர்ட்டு உறுதி செய்துள்ளது. உங்களுக்கு தண்டனை வழங்க இருக்கிறோம். உங்கள் தரப்பில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று கல்யாணசுந்தரத்தைப் பார்த்த கேட்டதும், ப்ளீஸ், நன்னடத்தை அடிப்படையில் எனக்கு விடுதலை தாருங்கள் என்று அவர் கேட்டுள்ளார்.
கருணை காட்ட தயாரில்லை
இதைக் கேட்ட நீதிபதி சரிதா, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய நீங்களே ஒரு தவறான வழியை தேர்வு செய்துள்ளீர்கள். உங்களுக்கு கருணை காட்ட இந்த நீதிமன்றம் தயாரில்லை என்று குறிப்பிட்டு கல்யாண சுந்தரத்துக்கும், அவருக்கு உதவியாக செயல்பட்ட 2 அரசு ஊழியர்களுக்கும் தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தர விட்டார். இதைக் கேட்ட கல்யாணசுந்தரம் கண்ணீர் வராத குறையாக கோர்ட்டை விட்டு வெளியேறினார். சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக கல்யாணசுந்தரம் அறிவித்துள்ளார்.