கார்கில் போருக்கு முன்பு இந்திய எல்லைக்குள் ஊடுருவி 'டேரா' போட்ட முஷாரப்: திடுக் தகவல்
இஸ்லாமாபாத்: கார்கில் போருக்கு முன்பாக எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவி அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷாரப் ஒருநாள் 'டேரா' போட்டிருந்தார் என்று அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியை பாகிஸ்தான் கடந்த 1999ஆம் ஆண்டு மே மாதம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதை எதிர்த்து இந்தியா போர் தொடுத்து வெற்றி பெற்றது. சுமார் 3 மாதம் நீடித்த இந்த கார்கில் போர் பற்றி அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஊடகப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான அஷ்பக் உசேன் என்பவர் கார்கில் போர் பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த தகவல்கள் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:
கார்கில் போருக்கு முன்பாக ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், கடந்த 1999-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந் தேதி எல்லை கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி இந்திய பகுதிக்குள் 11 கி.மீ. தொலைவுக்கு ஹெலிகாப்டரில் நுழைந்தார். அவருடன் பிரிகேடியர் மசூது அஸ்லம் உடன் இருந்தார். ஜிக்ரியா முஸ்டகார் என்ற இந்தியாவுக்கு சொந்தமான இடத்தில் பர்வேஷ் முஷாரப் ஒரு நாள் தங்கியிருந்தார். அந்த இடத்தில் பாகிஸ்தான் படையினர் கர்னல் அம்ஜத் ஷப்பீர் தலைமையில் ஊடுருவி இருந்தனர். மறுநாள் அவர் பாகிஸ்தானுக்கு திரும்பினார்.
பின்னர் பாகிஸ்தான் ராணுவ கேப்டன்கள் நதீம், அலி, ஹவில்தார் லாலிக்ஜன் ஆகியோர் உளவு பார்க்க அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் அடுத்தடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டி ஊடுருவிக் கொண்டே இருந்தது. இதை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர்தான் பார்த்து இந்திய படையினருக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பின்னரே இந்தியா பதிலடி கொடுத்தது.
பர்வேஸ் முஷாரப்பின் ஊடுருவலுக்குப் பிறகே கார்கில் போர் நடைபெற்றது. ஆனால் கார்கில் போரில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஆனால் பலியானோர் விவரத்தை பாகிஸ்தான் மறைத்துவிட்டது.
முஷாரப்பும் தம் மீதான கார்கில் போர் விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்ள நவாஸ் ஷெரீப் அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார் என்றும் அவர் கூறியுள்ளார்.