கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்: புயலைக் கிளப்பும் எதிர்கட்சிகள்
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. ஆளும் பாஜகவைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முன்னாள் முதல்வர் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியின் இணைந்துவிட்டனர். இதனால் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் அரசுக்கு நெருக்கடியாக உள்ளது. ஆனால் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் இன்று சட்டசபை கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இன்று காலை ஆளுநர் பரத்வாஜ் உரையாற்றுவார். இதையடுத்து வரும் 8ம் தேதி ஷெட்டர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இது தான் அவரது அரசு தாக்கல் செய்யும் இறுதி பட்ஜெட்டாகும். ஏனென்றால் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். கர்நாடக சட்டசபை 225 உறுப்பினர்களை கொண்டது. அதில் பாஜகவுக்கு 118 உறுப்பினர்கள் இருந்தனர். இந்நிலையில் 14 பேர் கட்சியை விட்டு விலகியதால் பாஜகவுக்கு தற்போது 104 உறுப்பினர்களே உள்ளனர். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள 113 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.