கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் மகன் கன்னத்தில் சூடுவைத்த தம்பதி
வேலூர்: வேலூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் மகனுக்கு ஒரு தம்பதி சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், கஸ்பா, செல்வபுரம் 5வது தெருவைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மனைவி சித்ரா(28). ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவி வருகிறார். அவர் 4வது தெருவில் வசிக்கும் வள்ளி(25) என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு சித்ரா அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான வள்ளி கடந்த சனிக்கிழமை தான் வசிக்கும் தெரு வழியாகச் சென்ற சித்ராவின் மகன் சதீஷை(8) பார்த்துள்ளார். உடனே அவர் சிறுவனை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது கணவர் குப்பனுடன் சேர்ந்து சிறுவனின் கன்னத்தில் சூடு போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சித்ரா இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வள்ளியையும், குப்பனையும் கைது செய்தனர்.