ரேஷன் கடையில் வழங்கப்படும் பாமாயில் அளவை 2 மடங்காக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட உணவுக்கு தேவையான பொருட்களின் விலை உயர்வை தாங்கிக்கொள்ள முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதால் ஒரு நாளைக்கு 2 வேளை உணவுகூட சாப்பிட முடியாத அவல நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதால் அரிசிக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன்விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டீசல் விலை மாதம்தோறும் உயர்த்தப்படவிருப்பதால் காய்கறி உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளிச்சந்தையில் விற்கப்படுவதற்கு இணையான தரம் கொண்ட அரிசியை நியாயவிலை கடைகள் மூலம் மானிய விலையில் விற்பனை செய்யவும், குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் பாமாயிலின் அளவை இரு மடங்காக உயர்த்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.