டெல்லி மாணவி பாலியல் வழக்கு விசாரணை தொடக்கம்… ஆண் நண்பர் சாட்சியம்
டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி விரைவு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
இந்திய குற்றவியல் சட்டப்படி 13 பிரிவுகளின் கீழ் 5 குற்றவாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உடனடி தீர்வு காண தினந்தோறும் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவர் மைனர் என்பதால் சிறார்களுக்கான குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.
விசாரணையின் போது, உயிரிழந்த மாணவியின் நண்பர் மற்றும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். குற்றவாளிகள் 5 பேர் மீதும் கடந்த சனிக்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடித்து தீர்ப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே முதலில் சாட்சிகள் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவி கற்பழிப்பு வழக்கில் அவரது ஆண் நண்பர்தான் மிக முக்கிய சாட்சி ஆவார். எனவே முதல் சாட்சியாக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இன்று மாணவியின் நண்பர் அதிவிரைவு கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் எத்தகையை குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்பதை அவர் கூறினார்.
இந்த சாட்சியமே இந்த வழக்கில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நாளை காவலாளி ஒருவர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார். அந்த காவலாளிதான் மாணவியும் அவர் நண்பரும் ரோட்டோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது போனில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தவர் ஆவார். இவர் கொடுக்கப்போகும் சாட்சியமும் குற்றச்சாட்டுக்களை உறுதிபடுத்துவது போல இருக்கும்.
குற்றவாளிகள் மறுப்பு
இதற்கிடையே குற்றவாளிகள் 5 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர். எனினும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான அளவு ஆதாரங்களை போலீசார் சேகரித்து கொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு மூடப்பட்ட நீதிமன்றத்தில் நடப்பதால் செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் யாரும் இது குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.