ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிளஸ் 2 மாணவி எரித்துக் கொலை: தீ வைத்த பக்கத்து வீட்டுக்காரரும் பலி
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிளஸ் 2 மாணவி ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி, குருநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. மொட்டமலை அருகே தரிசெட் வைத்து தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சுப்புலட்சுமி. அவர்களுக்கு ராஜேஸ்வரி(17), கவிதா(14) ஆகிய மகள்களும், முருகராஜ் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ராஜேஸ்வரி வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தார்.
ராமசாமி தான் தங்கியிருக்கும் வீட்டையொட்டியுள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். ஆதிசக்தி குழந்தைவேலு(33) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக ராமசாமியின் வீட்டில் குடியிருந்தார். குழந்தைவேலுவின் மனைவி முத்துலட்சுமி(32). அவர்கள் குழந்தைகள் தனசேகரன் (8), லட்சுமிதேவி (7). பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிய அவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதுவீட்டில் குடியேறினார். ஆனால் தான் தங்கியிருந்த ராமசாமியின் வீட்டில் தனது தாய் மற்றும் கணவரைப் பிரிந்த தங்கையை குடியமர்த்தினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை குழந்தைவேலு தனது தாய் தங்கியிருக்கும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் ராமசாமியும், அவரது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டனர். மகள்கள் பள்ளிக்கு கிளம்பியுள்ளனர். ராஜேஸ்வரி பள்ளிக்கு செல்ல வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பியபோது குழந்தைவேலு ஓடி வந்து ராஜேஸ்வரியை தனது வீட்டிற்குள் தூக்கிச் சென்றார்.
இதைப் பார்த்த ராஜேஸ்வரி தங்கை கவிதா சத்தம் போட்டுள்ளார். உதவிக்கு யாரையாவது அழைத்து வரச் சென்றார் கவிதா. அதற்குள் குழந்தைவேலு ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். ராஜேஸ்வரி அவரை பிடித்தில் குழந்தைவேலு படுகாயம் அடைந்தார். ஆனால் ராஜேஸ்வரியோ உடல் கருகி பலியானார்.
படுகாயமடைந்த குழந்தைவேலுவை சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.