சேலம் அருகே கீழே இறங்க தயாராக படிக்கட்டில் வந்து நின்ற 2 பி.இ.மாணவர்கள் பலி
சேலம்: சேலம் அருகே பேருந்து படிகட்டில் பயணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
ஆத்தூரில் இருந்து சேலத்திற்கு தினமும் தனியார் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இதில் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவ, மாணவியர் பயணம் செய்கின்றனர். இன்று காலையும் வழக்கம் போல் மாணவர்கள் அந்த பேருந்தில் கல்லூரிக்கு கிளம்பினர்.
பேருந்து காலை 9 மணிக்கு கல்லூரி அருகே செல்கையில் கீழே இறங்குவதற்காக மாணவ, மாணவியர் படிக்கட்டுக்கு வந்தனர். ஆனால் பேருந்து நிற்காமல் முன்னால் சென்ற லாரியை முந்தியது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது லாரி உரசியது. இதில் வாழப்பாடியைச் சேர்ந்த மாணவர் இளவரசன் மற்றும் வெள்ளாள குண்டத்தைச் சேர்ந்த அருள்பிரகாஷ் ஆகியோர் தலையில் பலத்த காயம்பட்டு இறந்தனர். அவர்கள் இருவரும் 2ம் ஆண்டு படித்து வந்தனர்.
அவர்களுடன் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பூவிழி ராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் பேருந்தை நிறுத்தினார். மாணவ-மாணவியர் கீழே இறங்கி ஓடிச் சென்று பலியாகிய மாணவர்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசேதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.