2ஜி செய்திக்குறிப்பை ஆ.ராசா கடைசி நேரத்தில் மாற்றிவிட்டார்: அட்டர்னி ஜெனரல்
2ஜி ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்தபோது தற்போதைய அட்டர்னி ஜெனரல் வாகனவதி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். அவர் மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் தொலைத் தொடர்பு தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராகினார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 2008ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விண்ணப்பங்கள் பற்றி தொலைத் தொடர்புத் துறை ஒரு செய்திக் குறிப்பை தயாரித்து அதை ஜனவரி 7ம் தேதி என்னிடம் காட்டி ஒப்புதல் பெற்றது. அந்த செய்திக் குறிப்பின் வரைவை அப்போதைய தொலைத் தொடர்புச் செயலாளர் சித்தார்த் பெஹுரா தானே வந்து என்னிடம் காண்பித்தார். அதில் 4 பத்திகள் இருந்தன.
ஜனவரி 10ம் தேதி பத்திரிக்கைகளில் அந்த செய்திக் குறிப்பு வெளிவந்தபோது அதில் என்னிடம் காண்பிக்கப்பட்ட வரைவில் இருந்த சில பகுதிகள் இல்லை. ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்த 2 நிறுவனங்களுக்கு ஒரே தகுதி இருந்தால் அவற்றில் எந்த நிறுவனம் முதலில் விண்ணப்பித்துள்ளதோ அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது எனக்கு ஏற்கனவே தெரிவிக்கவில்லை.
என்னிடம் ஒப்புதல் பெற்ற பிறகு செய்திக் குறிப்பில் மாற்றம் செய்யப்பட்டது எனக்கு தெரியாது. திருத்தங்களுடன் செய்திக்குறிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என்று ஆ. ராசா தன் கையால் எழுதிய குறிப்பை பின்னர் சேர்த்துள்ளனர். வேறொரு பேனாவை வைத்து இந்த குறிப்பை எழுதியுள்ளார்.
2ஜி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தபோதும் நான் இதே தகவலை தெரிவித்தேன். பத்திரிக்கைகளில் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்புக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. முதலில் விண்ணப்பிப்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறித்து என்னிடம் யாரும் ஆலோசிக்கவில்லை. 2ஜி உரிமங்கள் வழங்கும் முடிவுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றார்.