இந்தியாவில் 2 மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.30 கோடி மோசடி: 5 வங்கிகள் பாதிப்பு
மும்பை: கடந்த 2 மாதங்களில் இந்தியா முழுவதும் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.30 கோடி மோசடி நடந்துள்ளது.
இந்தியாவில் கிரெட்டி கார்டு மோசடி சில காலமாக நடந்து வரும் நிலையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் அதிக அளவில் மோசடி நடந்துள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் கிரெடிட் கார்டு மூலம் ரூ.30 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகள் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, சிட்டி பாங்க், எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
மோசடி ஆட்கள் கிரெடிட் கார்டு விவரங்களை டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மூலம் தான் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. விவரங்கள் கிடைத்தவுடன் அதை வைத்து பண பரிமாற்றம் செய்வது, பணம் செலவு செய்வது, போலி கார்டு தயாரிப்பது உள்ளிட்டவை நடப்பதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிரெட்டி கார்டு வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கே அதை பயன்படுத்தினால் அப்போது அதன் விவரத்தை பெற்று போலி கார்டுகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் தற்போது வெளிநாடுகளுக்கு போகாதவர்கள் மற்றும் ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யாதவர்களின் கார்டுகளும் கூட போலியாக தயாரிக்கப்படும் சம்பவங்கள் நடப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் அந்த பணத்தை திருப்பித் தரத் தேவையில்லை என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச கும்பல் தான் இந்தியாவில் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.