குடிக்கப் பணம் தாங்கடா... 6ம் வகுப்பு மாணவர்களை மிரட்டிய +1 'அண்ணாக்கள்'...!
சேலம்: குடி குடியைக் கெடுக்கும் என்பதெல்லாம் ரொம்பப் பழைய பழமொழி. இப்போது அதையும் தாண்டி ரொம்பக் கேவலமான நிலைக்கு சமுதாயத்தை இட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளது குடிப்பழக்கம். சேலம் அருகே தான் குடிக்கப் பணம் கேட்டு 6ம் வகுப்பு மாணவர்களை மிரட்டியுள்ளார்கள் பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்கள் ஐவர்.
ஒரு ஊரில் மது குடிப்பதற்காக பள்ளிக்கூடத்துப் பெஞ்ச்சை எடுத்துப் போய் விற்று மது அருந்திய மாணவர்களை தமிழகம் சில மாதங்களுக்கு முன்பு பார்த்தது.
குடித்து விட்டு வகுப்புக்கு வந்து ஆசிரியர்களை மிரட்டிய மாணவர்களையும் தமிழகம் பார்த்துள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதற்கு பணம் கேட்டு மாணவர்களை, அதிலும் சிறார்களைப் போய் மிரட்டியுள்ளனர் பிளஸ் ஒன் படிக்கும் ஐந்து மாணவர்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி விட்டு மாணவர்கள் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், ப்ளஸ் 1 படிக்கும் ஐந்து மாணவர்கள், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஏற்கனவே, அந்த மாணவர்கள் ஐந்து பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த பள்ளிக்கு சென்ற ஆத்தூர் போலீஸார், இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சம்பந்தப்பட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
பள்ளி மாணவர்கள், குடிபோதையில் சக மாணவர்களிடம் ரகளை செய்யும் சம்பவங்களால் மற்ற மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மது அரக்கன் இன்னும் என்னென்ன அட்டூழியங்களையெல்லாம் செய்யப் போகிறானோ...?