கடத்தப்பட்ட வன்னியர் பெண்ணை திரும்ப அழைத்து வந்த பெரியப்பா படுகொலை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கடத்தப்பட்ட வன்னியர் சமுதாயப் பெண் கர்நாடகத்தில் வைத்து மீட்கப்பட்டார். அவரை அவரது பெரியப்பா மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவரை சிலர் அடித்துக் கொலை செய்தனர். இதையடுத்து போலீஸார் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள அலகக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தைச சேர்ந்தவர் திம்மராயப்பா மகன் மஞ்சு (22). இவர் டிரைவர் வேலை செய்து வந்தார். இவர் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் வகுப்பைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சனிக்கிழமை மஞ்சு கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் மாணவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மாணவியும், அவரைக் கடத்திய மஞ்சுவும் கர்நாடக மாநிலம் பன்னரகட்டா பகுதியில் பதுங்கியிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் பெறறோர், பெரியப்பாவா மாதேஷ் உள்ளிட்டோர் கர்நாடகம் விரைந்தனர். மாணவியை சந்தித்து சமாதானம் பேசி அவரை அழைத்து வந்தனர்.
அவர்கள் தளி அருகே ஏரிப் பகுதி வழியாக காரில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மஞ்சுவும், அவரது நண்பர்களும் மாணவியை மீண்டும் கடத்த முயற்சி்தனர். இந்த முயற்சியில் இரு தரப்பும் கடுமையாகமோதியது. அப்போது மாதேஷ் கடுமையாக தாக்கப்பட்டார். அதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இந்த கடத்தல், கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும நிலவுகிறது. கலவரம் வெடித்து விடாமல் தடுப்பதற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாமகவினர் போராட்டம்
இந்த நிலையில் மாதேஷ் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து பாமகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை முடிந்து மாதேஷ் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல முயன்றபோது அரசு மருத்துவமனைக்கு வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக செயலாளர் அருண்ராஜன் தலைமையிலான பாமகவினர் திடீரென ஆம்புலன்சை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதேஷைக் கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் மாதேஷ் உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸ் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த பாமகவினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஓசூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் மாணவியின் பெரியப்பா கொலைக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். இதனால் போலீஸ் எஸ்.பி. அஸ்ரா கர்க் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.