விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு இருவார தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து, சில தினங்களுக்கு முன் விஜயகாந்த் பேசியது நாளிதழ்களில் வெளியாகியிருந்தது.
அதில் முதல்வர் ஜெயலலிதா, தன் சொந்தக் காரணங்களுக்காக படத்துக்கு தடை விதித்துவிட்டதாகவும், ஜெயா டிவிக்கு படம் தராததே இதற்குக் காரணம் என்றும் விஜய்காந்த் கூறியிருந்தார்.
இப்போது விஸ்வரூபம் விவகாரம் சுமூகமாக முடிந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக அரசு அல்லது முதல்வர் பற்றிப் பேசியதற்கு எதிராக வழக்குகள் பாய ஆரம்பித்துள்ளன.
ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் முதல்வரை அவதூறாகப் பேசியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறு வழக்குப் போடுவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அடுத்து இப்போது விஜயகாந்த் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக அரசு.
"விஸ்வரூபம் பிரச்சினை குறித்து விஜயகாந்த் பேசி பேச்சு ஜனவரி 31-ம் தேதி நாளிதழ்களில் வெளியாகியது. அந்த கருத்துக்கள் முதல்வர் ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளன. எனவே விஜயகாந்த் மீது சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது," என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.