ஜெயலலிதா அவர்களே, இந்தக் கொடூரத்தைப் பார்த்தாவது டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், ப்ளீஸ்!
ஸ்ரீவைகுண்டம்: இந்தக் கொடுமையைக் கேளுங்கள். மனைவியிடம் குடிக்கப் பணம் கேட்டுள்ளார் 75 வயது தாத்தா. மனைவியோ பணம் இல்லை என்றார். அப்படியானால் தாலியை விற்றாவது கொடு என்றார் கணவர். அதற்கு அந்த 70 வயது பாட்டி மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட தாத்தா, மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டார்.
ஸ்ரீவைகுண்டம் மேலஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவருக்கு 75 வயதாகிறது. இவருடைய மனைவி 70 வயதான பெரிய பிராட்டி. இவர்களுக்கு 6 மகள்கள், 3 மகன்கள் என மொத்தம் 9 பிள்ளைகள்.அத்தனை பேருக்கும் திருமணமாகி ஆளாளுக்கு ஒரு ஊரில் வசிக்கின்றனர்.
அர்ஜூனன் இளம் வயதிலிருந்தே மொடாக் குடியராம். தனது மனைவிக்கு அவரது வீட்டார் அந்தக் காலத்தில் திருமணத்தின்போது போட்ட 75 பவுன் நகை, நிலம் உள்ளிட்டவற்றை விற்றே அழித்து விட்டார்.
வயதான காலத்திலும் அவரது குடிப்பழக்கம் போகவில்லை. இப்போதும் தினசரி குடிக்காவிட்டால் மனிதருக்கு தூக்கம் வராதாம். இந்த நிலையில், கணவருக்கும், மனைவிக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு சண்டை வந்தது. அதைத் தொடர்நது இருவரும் தனித் தனி வீட்டில் வசித்து வந்தனர்.
மனைவி தனியாக போனாலும் கூட விடாத அர்ஜூனன் குடிக்கப் பணம் இல்லாவிட்டால் மனைவியிடம்தான் வருவாராம். பணம் இல்லாவிட்டால் தாலியைக் கழற்றிக் கொடு என்று கேட்டு அடிப்பாராம்.
2 நாட்களுக்கு முன்பும் இப்படி மோதல் எழுந்துள்ளது. அப்போது தாலியைக் கழற்றித் தர பெரிய பிராட்டி மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட அர்ஜூனன், அரிவாளை எடுத்து தாலியை அறுக்க முயன்றார். மேலும், மனைவியின் கழுத்திலும் அரிவாளால் வெட்டியுள்ளார் குடிவெறியில் மூளை மழுங்கிப் போன அந்த வயதான மனிதர்.இதில் பெரிய பிராட்டி ரத்த வெள்ளத்தில் துடித்தபடி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியைக் கொன்ற பின்னர் பயந்து போன அர்ஜூனன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
குடிவெறி இதுபோல எத்தனையோ உயிர்களையும், பொருட்களையும், குடும்பங்களையும் தொடர்ந்து நாசம் செய்து வருகிறது... அரசோ இன்றைக்கு விற்பனை டார்கெட்டை புடிச்சாச்சா என்பதை மட்டுமே கவனத்துடன் பார்த்து வருகிறது.