தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் பின்னணி என்ன?
அப்சல் குரு யார்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரை சேர்ந்தவர் அப்சல் குரு. எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு முடித்த நிலையில் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். பினர் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் இணைந்து ஆயுத பயிற்சி பெற்றார்.
பின்னர் ஜெய்ஷியே முகமது என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டு ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றார். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு 'புகலிடம்' கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்சல் குரு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்தத் தாக்குதலில் உதவியதற்காக தீவிரவாதிகள் கொடுத்த ரூ10 லட்சம் பணமும் அப்சல் குருவின் மறைவிடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அப்சல் குருவுக்கு 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு பொடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அப்சல்குருவும் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். 2004-ம் ஆண்டு அப்சல் குருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து அப்சல் குருவை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
பின்னர் உள்துறை அமைச்சகத்திடம் அப்சல் குரு கருணை மனு கோரியிருந்தார். 2010-ம் ஆண்டு இந்த மனுவை நிராகரிக்குமாறு உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. பின்னர் 2011-ம் ஆண்டு அப்சல் குருவின் கருணை மனுவை உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக நிராகரித்து தூக்கிலிடக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியது. அப்சல் அனுப்பிய கருணை மனுவை பிப்ரவரி 8-ந் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.
அப்சல் குருவால் சர்ச்சை
நாட்டின் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளியை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்பது பாரதிய ஜனதா போன்ற எதிர்க்கட்சிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.
ஆனால் நாடாளுமன்றம் மீது தாக்குதலின் வேறு சதி இருக்கிறது என்றும் அப்சல் குரு மீதான விசாரணை நேர்மையாக நடத்தப்படவில்லை என்றும் அருந்ததிராய் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.
ஜம்மு காஷ்மீரத்தின் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் மற்றும் அம்மாநிலத்தின் பல அரசியல் கட்சிகளும் அப்சல் குருவுக்கு கருணை காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியும், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் சரப்ஜித்சிங்குக்கு காட்டப்படும் கருணையை அப்சல் குருவுக்கும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அண்மையில் மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல்கசாப் தூக்கிலிடப்பட்ட போதே அப்சல் குருவுக்கு எப்போது தூக்கு என்று கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே விரைவில் அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தார்.
தற்போது அப்சல் குருவை தூக்கிலிடப்பட்டிருப்பதனால் மத்திய அரசு பெருமூச்சுவிட்டிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவும், காலதாமதமாக தண்டனை நிறைவேற்றப்பட்டாலும் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளது.
பிரணாப் முகர்ஜி பதவி காலத்தில்..
குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்ற சில மாதங்களிலேயே அடுத்தடுத்து தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட சில மாதங்களிலேயே நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.