10 ஆண்டு புறக்கணிப்பு முடிவு! மோடிக்கு ஜெர்மன் தூதர் கொடுத்த விருந்து
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கத் தொடங்கிவிட்டது என்ற செய்தி ஜெர்மனின் தூதரின் விருந்து மூலம் வெளியாகி இருக்கிறது.
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் மோடியை நிராகரித்து வந்தன. இந் நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து தூதர் குஜராத்தில் மோடியை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சும் அதிகரிக்க நாடுகளும் தமது பார்வையை மாற்றிக் கொள்ளத் தொடங்கி விட்டன.
குறிப்பாக குஜராத் மாநிலத்தின் முதல்வராக கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே மோடிக்கு எதிரான தமது 10 ஆண்டுகால புறக்கணிப்பை கைவிட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தீர்மானித்திருக்கின்றன.
இதன் ஒருபகுதியாக கடந்த மாதம் ஜனவரி 7-ந் தேதியன்று டெல்லியில் ஜெர்மன் தூதர் நரேந்திர மோடிக்கு ஒரு விருந்து கொடுத்திருக்கிறார். இந்த விருந்தில் இதர நாட்டு தூதர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த செய்தி ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படமாலேயே இருந்தது. தற்போதுதான் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஹார்வின்ஹோ, மோடியை ஒரு மிக முக்கியமான அரசியல் சக்தியாக பார்க்கிறோம். குஜராத்தில் 2002-ல் நடந்த தவறுகள் ஒரு பக்கம் இருக்க இப்பொழுது எப்படி நிலைமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.