அப்சல் குரு மரணத்திற்கு பழிவாங்க இந்தியா முழுவதும் தாக்குதல்: லஷ்கர் இ தொய்பா மிரட்டல்
நாடாளுமன்றத் தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்சல் குரு நேற்று காலை டெல்லியில் உள்ள திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனது உடல் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. அவன் உடலை புதைத்த பிறகே அவன் தூக்கிலிடப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு பழி வாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
லஷ்கர் இ தொய்பா செய்தித் தொடர்பாளர் அப்துல்லா பத்திரிக்கை அலுவலகம் ஒன்றை தொடர்பு கொண்டு கூறுகையில், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். பழிக்கு பழி வாங்குவோம். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை தகர்ப்போம். இந்தியா தன் செயலுக்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் என்றார்.
இதையடுத்து அனைத்து மாநில காவல்துறையையும் உஷாராக இருக்குமாறு உளவுத்துறை வலியுறுத்தியுள்ளது.