காஷ்மீரில் தொடரும் ஊரடங்கு! பத்திரிகைகள் வெளியீடு நிறுத்தம்!!
2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு உதவினார் என்பது அப்சல்குரு மீதான புகார். இதனால் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை நேற்று காலை 8 மணிக்கு டெல்லி திகார் சிறையில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்சல்குருவின் சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்தன. ஹுரியத் தலைவர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் டெல்லி விரைந்தனர். மேலும் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அப்சல்குருவின் சொந்த ஊரான சோப்பூர் மற்றும் பாரமுல்லா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்தன. இதில் 23 போலீசார் உட்பட 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று 2-வது நாளாக அந்த மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் அம்மாநிலத்தில் பெரும்பாலான பத்திரிகைகள் வெளியாகவில்லை. சில உள்ளூர் பத்திரிகைகளின் அலுவலகத்துக்கு நேற்று சென்ற போலீசார் அச்சிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் எழுத்துப்பூர்வமான உத்தரவு கொடுத்தால் மட்டுமே நிறுத்துவோம் என்று கூறி பத்திரிகைகளை வெளியிட்டனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் அவற்றை அவர்களால் விநியோகிக்க முடியவில்லை.
உருது மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகள் 60க்கும் மேற்பட்டவை இன்று வெளியாகவில்லை. ஆனால் அனைத்தின் இணையபதிப்பும் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.
உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்புகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.