கசாப்- அப்சல் குரு: இருவருக்கும் ஏன் ரகசிய தூக்கு?
கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து நடந்து விட்ட இந்த இரண்டு ரகசிய தூக்குத் தண்டனை நிறைவேற்றங்கள் ஒரு பக்கம் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளன. ஏன் இந்த இரண்டு தூக்குத் தண்டனைகளையும் மத்திய அரசு ரகசியமாக மேற்கொண்டது என்றகேள்விகளும் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் தீவி்ரவாதிகள் பத்து பேர் மும்பைக்குள் ஊடுறுவி நடத்திய கோரத் தாக்குதல் சம்பவத்தில் நம்மிடம் உயிரோடுசிக்கியவன் கசாப் மட்டுமே. அவன் மும்பை சிறையி்ல அடைக்கப்பட்டு பெரும் பொருட் செலவில் பாதுகாக்கப்பட்டு வந்தான். விசாரணையின் இறுதியில் அவனுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து திடீரென அவனை அதிகாலையில், தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியது மத்தியஅரசு.
கசாப் மிகவும் ரகசியமாக தூக்கிலிடப்பட்டான். இருப்பினும் கசாப்பின் மரண தண்டனையை நாடே எதிர்பார்த்திருந்ததால் இது பெரும் பாதிப்பு அலைகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தியரான அப்சல் குருவையும் அதே பாணியில் அதிகாலையில் திடீரென ரகசியமாக தூக்கிலிட்டது ஏன் என்று யாருக்குமே தெரியவில்லை. குருவின் குடும்பத்தினருக்குக் கூட இதுகுறித்து முன்கூட்டியே முறையாக தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது மனைவிக்கும் கூட இதுதெரிவிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மத்திய காங்கிரஸ் அரசுக்கு கசாப்பையும், அப்சல் குருவையும் தூக்கிலிடக் கோரி சங் பரிவார் அமைப்புகளும், பாஜக போன்ற கட்சிகளும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. வருகிற லோக்சபா தேர்தலில் இதை ஒரு பிரசார அம்சமாக முன்வைக்கவும் அவை தீவிரமாக முயன்று வந்தன. இதனால்தான் கசாப்பை வேகம் வேகமாக மத்திய அரசு தூக்கிலிட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது. கசாப்தூக்கிலிடப்பட்ட பின்னர் மோடி உள்ளிட்டோர், அப்சல் குரு விவகாரம் என்னவாயிற்று என்று பிரச்சினை எழுப்பினர். இந்த வாயை அடைக்க தற்போது அப்சல் குருவையும் தூக்கிலிட்டு விட்டது மத்திய அரசு.
ஆக, எதிர்க்கட்சியினரின் கண்டனங்கள், எதிர்ப்புகளிலிருந்து தப்பத்தான் இந்த இருவரையும் மத்திய அரசு தூக்கிலிட்டு அரசியல்ஆதாயம் தேடிக்கொண்டுள்ளதாக ஒருகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுபோல மேலும் எத்தனை பேரை மத்தியஅரசு ரகசியமாக தூக்கிலிடப்போகிறது என்ற பரபபரப்பான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.