கருணை மனுக்களை வேகமாக நிராகரிக்கும் பிரணாப் ... 3 மாதத்தில் 2 மனுக்கள் தள்ளுபடி
டெல்லி: கருணை மனுக்களை நிராகரிப்பதில் புதிய வரலாறு படைக்க ஆரம்பித்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. கடந்த 3 மாதங்களில் 4 மனுக்களைப் பரிசீலித்த அவர் 2 மனுக்களை நிராகரித்துள்ளார். அந்த இரண்டு பேரும் தூக்கிலிடப்பட்டு விட்டனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜி வந்து 6 மாதங்களாகி விட்டது. அதன் பிறகு அவர் முக்கியமான இருவரின் தூக்குத் தண்டனை நிறைவேற காரணமாக இருந்துள்ளார். ஒருவன் அஜ்மல் கசாப். இன்னொருவர் அப்சல் குரு. இருவரின் கருணை மனுக்களையும் பிரணாப் முகர்ஜி நிராகரித்த அடுத்த சில நாட்களில் இருவரும் தூக்கிலிடப்பட்டு விட்டனர். இருவருமே தீவிரவாத செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.
இதற்கு முன்பு இருந்த குடியரசுத் தலைவர்கள் யாரும் இதுபோல கருணை மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் விரைவு காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10 வாரத்தில் கசாப் கதை முடிந்தது
கசாப் தாக்கல் செய்த கருணை மனு தொடர்பான முடிவை 10 வாரத்தில் எடுத்தார் பிரணாப் முகர்ஜி. இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அதிவேகமாக எடுத்த கருணை மனு மீதான முடிவு இது என்று கூறப்படுகிறது.
16 மனுக்களை கிடப்பில் போட்ட பிரதீபா பாட்டீல்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது ஆட்சிக்காலத்தின்போது 16 கருணை மனுக்களை சந்தித்து அவற்றின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் விட்டு விட்டுப் போயிருந்தார்.
மின்னல் வேகத்தில் செயல்படும் பிரணாப்
இந்த 16 மனுக்களும் தற்போது பிரணாப் முகர்ஜி வசம் வந்துள்ளது. அதில் 2 மனுக்கள அவர் நிராகரித்துள்ளார். இதையடுத்து கசாப்பும், குருவும் தூக்கிலிடப்பட்டு விட்டனர். ஒருவரது தூக்கை ஆயுளாக குறைத்துள்ளார்.மீதமுள்ள 13 மனுக்களையும் கருத்து கேட்டு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாட்டீல் நிராகரித்தது 3
பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது 3 பேரின் கருணை மனுக்களை நிராகரித்தார். 12 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.
கசாப் விஷயத்தில் தீவிரம் காட்டிய பிரணாப்
கசாப் விஷயத்தி்ல பிரணாப் தீவிரம் காட்ட காரணம் உள்ளது. முகர்ஜி வெளியுறவு அமைச்சராக இருந்தபோது மும்பை தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது சர்வதேச நெருக்கடி அதிகரிக்க கடுமையாக பாடுபட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் முந்தைய குடியரசுத் தலைவர்களை விட பிரணாப் முகர்ஜி படு வேகமாக செயல்படுவதால் அதுவே ஒரு பரபரப்பாக மாறியுள்ளது.