பஸ் தினம்: கல்லூரி முதல்வர்களுக்கு போலீசார் கடிதம்
சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். இந்த கொண்டாட்டித்தின்போது வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும் பஸ் தினம் கொண்டாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15-பி பஸ்ஸில் பஸ் தினம் கொண்டாடப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அயனாவரம், வேப்பேரி, கெல்லீஸ் ஆகிய பகுதிகள் 14 இடங்கள் மற்றும் பஸ் நிறுத்தம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எழும்பூர் வடக்கு ரயில் நிலை பஸ் நிலையத்தில் இருந்து 15-பி பஸ்ஸை எடுத்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக தங்கள் கல்லூரி வரை சென்று பஸ் தினத்தை கொண்டாட திட்டமிட்டனர்.
இதனால் எழும்பூர் வடக்கு ரயில் நிலைய பஸ் நிலையத்தில் இன்று காலையிலேயே 10க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டனர். போலீஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. மேலும் சென்னை மாநில கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, தியாகராயர் கல்லூரி, அம்பேத்கர் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் அருகிலும் சுமார் 100 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் பஸ்ஸை தங்கள் கல்லூரிக்கு அருகில் 3 கிமீ தூரம் வரை எடுத்துச் செல்வதால் கல்லூரிகள் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிறுத்தங்களில் நின்ற மாணவர்களை கூட்டம் சேர விடாமல் அவ்வப்போது பஸ்களில் ஏற்றி அனுப்பினர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சென்னையில் பஸ் தினம் கொண்டாட கல்லூரி மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதையும் மீறி பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில் தான் பஸ் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளோம்.
இது குறித்து அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். இதையும் மீறி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட முயற்சித்தால் அவர்களை கைது செய்வோம் என்றார்.
சென்னையில் பஸ் தினம் கொண்டாட கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதில் இருந்து தான் போலீசார் பஸ் தின கொண்டாட்டம் நடைபெறவிடாமல் தடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.