வட சென்னை 'ரவுடிமார்களைக் கவனிக்க' வளைத்து வளைத்து சாலைகளில் கேமராக்கள்!
சென்னை: வட சென்னையில் புழங்கி வரும் ரவுடிகளின் செயல்பாடுகளைக் கண்கணிக்கவும், சண்டை, கலாட்டா உள்ளிட்டவற்றைக் கண்காணித்து துரித கதியில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைப் பிடிக்கவும், முக்கியச் சாலைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வட சென்னையின் முக்கியப் பகுதிகளி்ல் தற்போது போலீஸ் கண்காணிப்பு மேலும் சிறப்பாக உயர்ந்துள்ளது.
வடசென்னை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறிவந்தன. மேலும், ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பொது மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தொடர் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வடசென்னையில் ரவுடிகள் கொட்டத்தை அடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்தார்.
தற்போது ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்கும் வகையில், அடுத்து அதிரடியான நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
வட சென்னையின் முக்கியப் பகுதிகள்
வட சென்னையின் முக்கியப் பகுதிகள் என்று பார்த்தால் வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், புளியந்தோப்பு, கொடுங்கையூர் உள்ளிட்ட 14 இடங்கள் வருகிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்தப் பகுதிகளில்தான் அதிக அளவிலான ரவுடிகள் நடமாட்டம், அடிதடி, கொலை உள்ளிட்டவை பெருமளவில் நடைபெறுகின்றன. எனவே இந்த இடங்களில் முக்கியச்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த முடிவு செய்தது போலீஸ்.
முதலில் 4 இடங்களில்
அதில் முதல் கட்டமாக அம்பேத்கார் கல்லூரி சந்திப்பு சிக்னல், வியாசர்பாடி கடை வீதி, எம்.ஆர்.கே. சந்திப்பு, மீனாம்பாள் சாலை, சிட்கோ சந்திப்பு ஆகிய 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
அடுத்து பேசின் பிரிட்ஜ் முதல் ஓட்டேரி வரை
அடுத்து, பேசின் பிரிட்ஜ், ஹஜ் பிலாஸ் சந்திப்பு, ஜமாலியா, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொறுத்துவதற்கான ஏற்பாடுகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
எந்த ரவுடியும் தப்ப முடியாது
முக்கிய சாலைகளில் பொறுத்தப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் இருந்து ரவுடிகள் எளிதில் தப்ப முடியாது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிச் செல்லும் ரவுடிகளை பிடிப்பதற்கும் கண்காணிப்பு கேமராக்கள் உறுதுணையாக இருக்கும் என்று போலீசார் நம்புகிறார்கள்.
அடிக்கடி போட்டுப் பார்த்துப் பிடிப்பார்கள்
கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீசார் அடிக்கடி போட்டு பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். அதில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எப்படியோ வட சென்னையை வசந்த சென்னையாக மாற்றினால் சரித்தான்...