அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு பொது மன்னிப்பு சபை கடும் கண்டனம்
லண்டன்: தீவிரவாதி அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு சர்வதேச பொது மன்னிப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தீவிரவாதி அப்சல் குரு நேற்று காலை 8 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிட்ட பிறகே அந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குருவை தூக்கிலிட்டதற்கு சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பொது மன்னிப்பு சபை அதிகாரி சஷிகுமார் வேலத் கூறுகையில்,
அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். உலக நாடுகள் மரண தண்டனைக்கு எதிராக உள்ள நிலையில் இந்தியா இவ்வாறு செய்துள்ளது. அப்சல் குரு வழக்கு விசாரணை நியாயமாக நடந்ததா என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. குருவுக்கு அவரது விருப்பப்படி வழக்கறிஞர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அஜ்மல் கசாபை கடந்த நவம்பர் மாதம் தூக்கிலிட்டதற்கு முன்பு வரை கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்தும், தூக்கு தேதி குறித்தும் இந்தியா அறிவிப்பு வெளியிட்டு வந்தது. தற்போது ரகசியமாக தூக்கிலிடும் முறை வருத்தத்திற்குரியது என்றார்.