அகமதாபாத் மத்திய சிறையில் 18 அடி சுரங்கப்பாதை தோண்டிய கைதிகள்
அகமதாபாத்: குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகமதாபாத் தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் கைதான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பச் சேர்ந்த 14 பேர் தோண்டிய 18 அடி சுரங்கபாதையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 26ம் தேதி அகமதாபாத்தில் 20 இடங்களில் தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததில் 57 பேர் பலியாகினர். இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டு அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்து தப்பித்துச் செல்ல கடந்த 5 முதல் 6 மாதத்தில் 18 அடி நீள சுரங்கப்பாதையை தோண்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறை கண்காணிப்பாளர் விஎம் பார்கி கூறுகையில்,
தொடர்குண்டுவெடிப்பில் கைதான 14 பேர் இருக்கும் அறையில் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் ரஜினிகாந்த் பட்டேல் தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் இன்று காலை நடந்தது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கைதிகள் சாப்பாட்டுத் தட்டு, மரக்கட்டையை வைத்து தான் சுரங்கப்பாதையை தோண்டியுள்ளனர் என்றார்.
நேற்று இரவு இரண்டு கைதிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருந்து அறையை சோதனை செய்ததில் இந்த சுரங்கபாதை கண்டுபிடிக்கப்பட்டது.
அகமதாபாத் தொடர்குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை சபர்மதி சிறை வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சிறை ஐஜி பிசி தாகூர் கூறுகையில்,
கைதிகள் தினமும் 3 மணிநேரம் தங்களுக்கு பிடித்த வேலையை செய்யலாம். இந்த கைதிகள் அந்த நேரத்தில் தான் சுரங்கப்பாதை தோண்டியிருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம். அவர்கள் என்னதான் தோண்டினாலும் இங்கிருந்து தப்பிக்க முடியாது. சிறையின் சுற்றுச்சுவர் 21 அடி உயரம் உள்ளது. மேலும் பூமியில் 20 அடி ஆளம் வரை சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இவ்வளவு தூரம் தோண்டியது சிறை அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது. அவர்கள் தோட்ட வேலை செய்ய முன்வந்தனர். அப்போது சுரங்கப்பாதை தோண்டிய மண்ணை தோட்டத்தில் கொட்டியிருக்க வேண்டும் என்றார்.
சுரங்கப்பாதை தோண்டியவர்கள் விவரம் வருமாறு,
சஜித் மன்சூரி, யூனுஸ் மன்சூரி, ஷம்ஷூத் ஷாப்பூர்வாலா, ஜாவித் ஷேக், காத்ரி ஜுஹாபுரவாலா, ஆரிஃப் காத்ரி, உமர் காலா, உஸ்மான் அகர்பாத்தி, கயாமுத்தீன், முப்தி அபு பஷார். இதில் உஸ்மான் ஒரு சிவில் என்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் 68 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டது. அதில் 14 பேர் தான் சிறையில் உள்ளனர்.