குற்றால மலையில் பயங்கர தீ: அரியவகை மூலிகைகள் நாசம்
குற்றாலம்: குற்றால மலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அரிய வகை மூலிகைகள் கருகி சாம்பலாகின.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பல அரிய வகை மூலிகைகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போன நிலையில் வடகிழக்கு பருவமழை புயலாக உருவெடுத்து மழை கொட்டியதால் இந்த வனப்பகுதி செழுமையானது.
தற்போது போதிய மழை இல்லாததால் இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அடியோடு நின்றுவிட்டது. மேலும் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் குற்றாலம் அருவியை சுற்றியுள்ள பகுதியில் லேசான புகை மூட்டம் தெரிந்த நிலையில் அவை திடீரென காற்றின் வேகம் காரணமாக தீயாய் பரவியது. இத்தீயின் காரணமாக அருவி பகுதிகளின் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் தீயில் கருகின.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.