அப்சல் குருவுக்கு ஸ்ரீநகரில் கல்லறை ரெடி, உடலுக்காக வெயிட்டிங்
டெல்லி: திகார் சிறையில் புதைக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஸ்ரீநகரில் கல்லறை தயார் செய்யப்பட்டுள்ளது. அவரது உடலை பெறும் முயற்சியில் அவரது குடும்பத்தார் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடல் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. அவரை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்தவும், அவர் பயன்படுத்திய பொருட்களை வாங்கிக் கொள்ளவும் அவரது குடும்பத்தார் திகார் சிறைக்கு வர நேற்று மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் சிறைக்கு வர அப்சல் குருவின் குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.
இது குறித்து அப்சலின் சகோதரர் யாசீன் குரு கூறுகையில்,
அப்சல் குருவுக்கு காஷ்மீரே அஞ்சலி செலுத்தி வருகிறது. அவரது உடலை ஒப்படைக்குமாறு அப்சலின் மனைவி தபசும் பாரமுல்லா துணை கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றார்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் முஸ்லிம் தியாகிகளை புதைக்கும் ஈட்காவில் அப்சல் குருவுக்கு ஒரு இடம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. அவரது கல்லறையில் வைக்க கருப்பு நிற கிரானைட் கல்லில் தேச தியாகி முகமது அப்சல் குரு, இறப்பு: 9-2-2013 என்று எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.