வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 61 பேரிடம் பல லட்சம் மோசடி
செங்கோட்டை: செங்கோட்டையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 61 பேரிடம் பணத்தை வாங்கிய டிராவல்ஸ் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.
தமிழக-கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வனத்துறை அலுவலகம் எதிரே கேரளாவைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் ஏர்வேஸ் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த மாதம் வெளிநாடுகளுக்கு ஆட்கள் தேவை, விசா இலவசம் என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து கேரள மாநிலம் மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 61 பேர் அவரிடம் வேலை கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களிடம் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை பணம் வாங்கிவிட்டு அவர்களை மொரிஷியஸுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் அவர்களின் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்.
கடந்த மாதம் 2ம் தேதி அனைவரையும் விமானத்தில் ஏற்றிவிடுவதாக கூறியவர் பின்னர் 5ம் தேதி, 8ம் தேதி, 10ம் தேதி என காலம் தாழ்த்தவே விண்ணப்பித்தவர்களும் இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் செல்வோம் என்ற நம்பிக்கையோடு இருந்துள்ளனர். ஆனால் பல நாட்களாக அலைந்து வெறுத்துப் போனவர்கள் பணத்தையும், பாஸ்போர்ட்டையும் கேட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தலைமறைவானார்.
இதையடுத்து ஏமாந்தவர்கள் செங்கோட்டை போலீசில் புகார் செய்தனர். மேலும் தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜிடமும் புகார் கொடுத்தனர்.