வினோதினி விவகாரம்: ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?
சென்னை: ஆசிட் வீச்சில் வினோதினி பலியாகியுள்ளதையடுத்து ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
காரைக்காலில் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடிவிட்டு தான் பணிபரியும் சென்னைக்கு கிளம்பிய என்ஜினியர் வினோதினி மீது அவரை ஒரு தலையாக காதலித்த சுரேஷ் ஆசிட் ஊற்றினார். இதில் படுகாயமடைந்து கண் பார்வையை இழந்த வினோதினி நேற்று மரணம் அடைந்தார். பெண்கள் மீது ஆசிட் வீசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
அதிலும் குறிப்பாக ஒரு தலைக் காதல் அல்லது ஆசைக்கு இணங்காவிட்டால் உடனே அந்த பெண் மீது ஆசிட் ஊற்றிவிடுகிறார்கள். சம்பவம் நடந்த சில நாட்கள் ஆசிட் வீச்சை எதிர்த்து வலுக்கும் குரல்கள் நாட்கள் செல்ல செல்ல காணாமல் போய்விடுகிறது. பெண்களுக்கு எதிரான இந்த கொடுமைகளுக்கு வினோதினியின் மரணம் மூலம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிட் எளிதில் கிடைப்பதால் தான் இஷ்டத்திற்கு வாங்கி தங்களுக்கு பிடிக்காத பெண்கள் மீது வீசி வருகின்றனர். அதனால் ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து அதை உடனே அமல்படுத்த வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆசிட் ஊற்றியவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பது போன்று ஆசிட் விற்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.