விழுப்புரம் அதிமுக கவுன்சிலர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் ரெய்ட்
விழுப்புரம்: வட்டிக்கு பணம் கொடுத்து வரும் விழுப்புரம் அதிமுக கவுன்சிலரின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விழுப்புரம் நகராட்சியின் 7வது வார்டு அதிமுக கவுன்சிலர் குமார் (44). இவரது முக்கியத் தொழில் கந்து வட்டியாகும்.
குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து பணம் வசூலித்து வருகிறார். வேறு எந்தத் தொழிலும் இல்லாத இவர் வட்டி மூலம் பெரும் கோடீஸ்வரராக உள்ளார்.
ஆனால், இந்த வட்டித் தொழிலில் எழுத்துப்பூர்வமாக ஏதும் இல்லாததால் உரிய வருமான வரியை கட்டும் பழக்கமும் இல்லை.
இந் நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கவுன்சிலர் குமார் வீட்டில் சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறை இணை இயக்குனர் சிவஜோதி, விழுப்புரம் வருமான வரி அலுவலர் கலைமணி உள்பட 16 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர் குமார் முன்னிலையில் இந்த சோதனை நடந்தது. நேற்று காலை தொடங்கிய இந்த ரெய்ட் நள்ளிரவு சுமார் 1 மணி வரை சுமார் 15 மணி நேரம் நீடித்தது. இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டு சென்றனர்.