திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் பரபரப்பு... அந்தோணி மனைவியிடம் 2 முறை சோதனை செய்த அதிகாரிகள்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மனைவி எலிசபெத்திடம் 2 முறை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தோணியின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு அந்தோணியின் மனைவி எலிசபெத், டெல்லிக்குக் கிளம்பினார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த அவர் அங்கு வழக்கமான பரிசோதனைகளை சந்தித்தார். அபபோது பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸ்காரர் ஒருவர் முதலில் எலிசபெத்தை சோதனையிட்டார். அதன் பிறகு எலிசபெத் அனுப்பப்பட்டார். ஆனால் திடீரென மறுபடியும் எலிசபெத்தை சோதனையிட வேண்டும் என்று அவர் கூறவே பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் எலிசபெத் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மீண்டும் சோதனைக்காக சென்றார். ஆனால் மத்திய தொழிலக பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிந்து அவர்கள் விரைந்து வந்து எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்டனர். அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும், 2வது முறையாக சோதனையிட்ட பெண் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்தனர்.
ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எலிசபெத் கேட்டுக் கொண்டதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அதுசரி, பாதுகாப்புத்துறையினர் பணியைச் செய்தால், உடனே நடவடிக்கையா?....அந்தப் பெண் போலீஸ்காரர் தனது கடமையைத்தானே செய்தார்.. ஆளவந்தார்கள் மாறினாலும் கூட இந்த உயர் அதிகாரிகள் மாறவே மாட்டார்கள் போல...!