கும்பமேளாவில் திடீர் தீ: ஒருவர் பலி, 30 கூடாரங்கள் நாசம்
அலகாபாத்: அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று காலை திடீர் என்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் பல கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
உத்தர பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளா விழா நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு 3 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு தங்கள் ஊர்களுக்கு செல்ல அலகாபாத் ரயில் நிலையத்தில் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகினர், பலர் பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் கும்பமேளாவுக்கு வந்துள்ள யாத்ரீகர்கள் தங்க அங்கு பல கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீர் என்று அந்த கூடராங்கள் தீப் பிடித்து எரிந்தன. கூடாரங்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த விபத்தில் ஒருவர் பலியானார், சுமார் 30 கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின. மின் கசிவு ஏற்பட்டதால் தான் கூடாரங்கள் தீப்பிடித்ததாக எஸ்.பி. ஆர்கேஎஸ் ராத்தோர் தெரிவித்தார்.
இன்று பசந்த் பஞ்சமி என்பதால் திரிவேணி சங்கமத்தில் நீராட நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகாபாத்தில் கூடியுள்ளனர்.