சென்னையில் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம்: பருவநிலை மாறுதல் குறித்து விவாதம்
சென்னை: பேசிக் (இந்தியா, சீனா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா) நாடுகள் சார்பில் பருவநிலை மாறுதல் குறித்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றத்தை வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் கவனித்து வருகின்றன. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு (பேசிக்) ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் ஒவ்வொரு வருடமும் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி பருவ நிலைமாற்றம் குறித்து விவாதிக்கின்றனர். இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் நேற்று தொடங்கியது.
நான்கு நாடுகளின் சுற்றுச்சூழல் நிபுணர்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் வளர்ந்து வரும் நாடுகள் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் அளவை குறைக்கவேண்டிய அளவுக்கு குறைக்கவில்லை. மேலும் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு கார்பன் அளவை கட்டுப்படுத்த வருடத்திற்கு 100 பில்லியன் டாலர் வழங்கவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டும் அந்த நிதியை இன்னும் வழங்கவில்லை என்பது பற்றியும் நேற்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் விவாதித்தனர்.
ஆலோசனைக்கூட்டம்
நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய நாட்டின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயந்தி நடராஜன், சீன நாட்டின் தேசிய மேம்பாட்டு மறு சீரமைப்பு ஆணைய துணைத்தலைவர் சை சென்குவா, பிரேசில் நாட்டு மந்திரி கார்லஸ் அகஸ்டோ கிளிங்க், தென்ஆப்பிரிக்கா மந்திரி ஆல்பிரட் ஜேம்ஸ் வில்ஸ், கத்தார் நாட்டு துணை பிரதமர் அப்துல்லா பின் ஹமத் அத்திக், இந்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர் ராஜகோபாலன், இணைசெயலாளர்கள் ஆர்.ஆர்.ராஷ்மி, டி.எஸ்.திருமூர்த்தி, மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனின் சிறப்பு தனி அதிகாரி டாக்டர் காயத்திரி தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர்கள் விவாதம்
இன்று (சனிக்கிழமை) நடக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தில் டர்பைன் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் பருவநிலை மாறுதல் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்படுகிறது.
உலகளாவிய நோக்கத்தை அடையும் வகையில் சர்வதேச அளவிலான ஒவ்வொரு துறை வாரியாக எடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப்பணிகளையும் பொறுப்புகளையும் இந்த அமைச்சர்கள் விவாதிக்கிறார்கள். 2020-ம் ஆண்டு ஒளிமயமான எதிர்கால திட்டங்களை சாதிக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.