ஹெலிகாப்டர் ஊழல்... இங்கிலாந்து பிரதமரிடமே தகவலை கேட்டுப் பெற இந்தியா முடிவு
அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரம் தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற கேமரூனின் உதவியை நாடு இந்திய அரசு தீர்மானித்துள்ளது.
டேவிட் கேமரூன் 3 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை மறுதினம், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரம் தொடர்பான கூடுதல் தகவல்களை இந்திய அதிகாரிகள் கேட்பார்கள் என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை அழைத்துச் செல்வதற்காக, இத்தலியின் ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்ட நிலையில், ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி, இந்தியாவில் சிலருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது.
ஏற்கனவே வழங்கப்பட்ட 3 ஹெலிகாப்டர்களும், இங்கிலந்தில் செயல்படும் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனம், ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பதால், இங்கிலந்து வெளியுறவு அதிகாரிகளிடம், இதுகுறித்து தகவல் கேட்கப்பட்டது. எனினும், இடைக்கால அறிக்கையை மட்டுமே இங்கிலந்து அதிகாரிகள் அளித்தனர்.
இதில் திருப்தி இல்லாத காரணத்தால், டேவிட் கேமரூனின் இந்தியப் பயணத்தின் போது இதுகுறித்து விவாதிக்கப்படும் என மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் டேவிட் கேமரூனின் இந்திய பயணத்தின் போது, இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டறிய இந்தியா முடிவு செய்துள்ளது.