தனிமைச் சிறையில் வீரப்பன் கூட்டாளிகள்.. தூக்கில் போடத் தயாராகும் அசோக்!
பெல்காம்: நான்கு வீரப்பன் கூட்டாளிகளும் தற்போது பெல்காம் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விருப்பமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களை அசோக் என்பவர் தூக்கில் போட தயாராக இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
நான்கு பேரையும் காப்பாற்ற குடும்பத்தினர் கடுமையாக போராடி வரும் நிலையில் மறுபக்கம் நாளையே அவர்களைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான்கு பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்நது தற்போது அவர்களை பெல்காம் சிறையின் தனிமைச் சிறையில் அடைத்துள்ளனராம்.
வழக்கு என்ன..?
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான மாதேஸ்வரன் மலையில் உள்ள பாலாறு பாலத்தை வீரப்பன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 1993, ஏப்ரல் மாதம் கண்ணிவெடி மூலம் தகர்த்தான். அதில் கர்நாடக போலீஸ் வேன் சிதறி, 22 போலீசார் பலியாகினர்.
கைதான நால்வர்
இந்த பயங்கர தாக்குதல் வழக்கில் வீரப்பனின் கூட்டாளிகளான மீசை மாதையன், ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மைசூர் கோர்ட்டில் ஆயுள்
இந்த நால்வருக்கும் மைசூர் தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதை கர்நாடக உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அங்கு ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனையாக உயர்த்தப்பட்டது.
கருணை மனுக்கள் நிராகரிப்பு
சமீபத்தில் நான்கு பேரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து நால்வரையும் தூக்கிலிடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
தனிமைச் சிறையில்
இதைத் தொடர்ந்து நான்கு பேரும் தற்போது பெல்காம் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி உடல் நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருவர் இருவராக தூக்கிலிடப்படலாம்
நாளை இவர்கள் நால்வரையும் தூக்கிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இவர்களை மொத்தமாக தூக்கிலிடுவார்களா அல்லது ஒருவர் பின் ஒருவராக தூக்கிலிடுவார்களா என்பது தெரியவில்லை. அதேசமயம் இருவர் இருவராக தூக்கிலிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தூக்கிலிடத் தயாராகும் அசோக்
பெல்காம் சிறையில் முன்பு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பணியில் காம்ப்ளே என்பவர் இருந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் சிலருக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். அவர்களில் ஒருவரான அசோக் என்பவர்தான் நான்கு வீரப்பன் கூட்டாளிகளையும் தூக்கிலிடவுள்ளார் என்று தெரிகிறது.