நாகை அருகே ஒரே வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை!
நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் மாவட்டம் பூதனூர் என்ற இடத்தில் ஒரே வீட்டில் 120 பவுன் தங்க நகைகள், ரூ. 70,000 பணம் ஆகியவற்றை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பூட்டிய வீடுகளில் திருடும் சம்பவங்களுக்கு என்றுமே குறைவில்லை. ஆனால் சமீப காலத்தில் இது தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. தங்கம் விற்கும் விலைக்கு நகைத் திருட்டு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் ஒரு பூட்டிய வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகளையும், ரூ.70,000 பணத்தையும் திருடிச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் பொறையாறு அருகே பூதனூர் பகுதியில் வசித்து வருபவர் சம்சுதா. இவர் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.