நமது நாட்டுக்கு தூக்குத் தண்டனை சரிப்பட்டு வராது - டி.ராஜா
ஈரோடு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை குழாய் வழியாக கொண்டுச் செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கீழ் இயங்கும் கெயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
விவசாயிகளுடன் கலந்து பேசி இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். காவல்துறை உதவியுடன் விவசாயிகளை மிரட்டுவதை கைவிட வேண்டும்.
அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் மரண தண்டனை பற்றிய விவாதம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. எந்த வகை குற்றம் செய்தாலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தீர்வாகாது. சிறையிலேயே தங்களது வாழ்நாள் முழுவதையும் கழிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
அதேபோல குற்றவாளிகள் மனந்திருந்தும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். உலகில் பல நாடுகளில் மரண தண்டனை கைவிடப்பட்டு விட்டது. ஒரு சில நாடுகளில்தான் இந்த தண்டனை உள்ளது.
மிகப் பெரிய பாரம்பரியம் கொண்ட இந்தியாவில் மரண தண்டனையை கைவிட சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கிருஷ்ணய்யர் கூட இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது வாழ்க்கையை சிறையில் கழித்துவிட்டனர். எனவே, இவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை தடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு மீது தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஹெலிகாப்டர் பேர ஊழல் அண்மையில் எழுந்துள்ளது. பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யார்? என்பதை தீவிர விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுநடவடிக்கை குழு விசாரணை நடத்தியதுபோல இந்த ஊழலில் விசாரணை நடத்த வேண்டும். பல்வேறு மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியிலும் விரைவில் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அரசியல் அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கான முயற்சியை இடதுசாரி கட்சிகள் மேற்கொள்ளும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது தவறான நடைமுறை. எந்த கட்சிக்கு அதிக சீட் கிடைக்கிறதோ, அந்த கட்சி எம்.பிக்கள்தான் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியும் என்றார் அவர்.