துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருது: ஒபாமா வழங்கினார்
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள சாண்டி ஹுக் மழலையர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள், 6 ஆசிரியைகள் உள்பட 26 பேர் பலியாகினர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 ஆசிரியைகளின் பெயர்கள் அமெரிக்காவின் 2-வது உயரிய விருதான ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் பலியான ஆசிரியர்களின் குடும்பத்தாரிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இவ்விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் ஒபாமா,"பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் பலியான ஆசிரியைகள் நினைத்திருந்தால், தங்களது உயிரை தற்காத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், அவர்கள் தன்னலத்தை பெரிதாக கருதவில்லை. தங்களது பாதுகாப்பில் இருந்த குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிர்களை அவர்கள் இழந்தனர்" இவ்வாறு ஒபாமா பேசினார்.
உலக நாடுகளை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னர் துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்டங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.