21ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்... ஹெலிகாப்டர் பேர ஊழல் பெரும் பிரச்சினையைக் கிளப்பும்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துடன் தொடர் தொடங்குகிறது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.
அதன் பின்னர் 26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், அடுத்தநாள் பொருளாதார ஆய்வறிக்கையும், 28ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
வழக்கம் போல பல்வேறு பிரச்சினைகளுடன் நாடாளுமன்றத்தைக் கலக்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஏற்கனவே இருக்கிற பிரச்சினைகளுடன் புதிதாக ஹெலிகாப்டர் பேர ஊழலும் சேர்ந்துள்ளதால் அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, எல்லையில் பாகிஸ்தான் படையினரால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எப்படிச் செயல்படுவது என்று உத்திகளை வகுக்க பாஜக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.